Podhu ThiruAngamaalai


 

பொது – திருஅங்கமாலை

 

திருச்சிற்றம்பலம்

 

தலையே நீவணங்காய் – தலை

மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

தலையே நீவணங்காய்

 

கண்காள் காண்மின்களோ – கடல்

நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்

கண்காள் காண்மின்களோ

 

செவிகாள் கேண்மின்களோ – சிவன்

எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்

செவிகாள் கேண்மின்களோ

 

மூக்கே நீமுரலாய் – முது

காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை

மூக்கே நீமுரலாய்

 

வாயே வாழ்த்துகண்டாய் – மத

யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை

வாயே வாழ்த்துகண்டாய்

 

நெஞ்சே நீநினையாய் – நிமிர்

புன்சடை நின்மலனை

மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

நெஞ்சே நீநினையாய்

 

கைகாள் கூப்பித்தொழீர் – கடி

மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

கைகாள் கூப்பித்தொழீர்

 

ஆக்கை யாற்பயனென் – அரன்

கோயில் வலம்வந்து

பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்

ஆக்கை யாற்பயனென்

 

கால்க ளாற்பயனென் – கறைக்

கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்

கால்க ளாற்பயனென்

 

உற்றா ராருளரோ – வுயிர்

கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

குற்றா ராருளரோ

 

இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்

பல்கணத் தெண்ணப்பட்டுச்

சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு

இறுமாந் திருப்பன்கொலோ

 

தேடிக் கண்டுகொண்டேன் – திரு

மாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்

 

 

திருச்சிற்றம்பலம்


Verse
    

Ready Reckoner


 

Please leave your valuable suggestions and feedback here