Vaaranam Aayiram


வாரணமாயிரம்

   

Ready Reckoner


வாரண மாயிரம் சூழவ லம்செய்து

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

 

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்

கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்

 

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

 

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி

பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை

காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

 

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்

 

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

 

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்

 

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மையு டையவன் நாராய ணன்நம்பி

செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி

அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்

 

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி

அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து

பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

 

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

மங்கல வீதி வலம்செய்து மணநீர்

அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்

மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

 

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை

வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்

வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே


Please leave your valuable suggestions and feedback here