030-ThiruKavalampaadi


Thiru Kavalampaadi ( Sri Gopala Krishna Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.1

** தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு *

நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய் *

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக் *

காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.2

மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான் *

விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய் *

துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய *

கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.3

உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி *

கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரச ளித்தாய் *

பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக் *

கருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.4

முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து * ஆங்

கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே *

சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக் *

கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.5

படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து *

மடவரல் மங்கை தன்னை  மார்வகத் திருத்தி னானே *

தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய *

கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.6

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று *

பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய் *

நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய *

கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.7

மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி *

மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய் *

பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும் நாங்கைக் *

காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.8

ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று *

காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய் *

பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக் *

காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.9

சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி *

அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய் *

மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை *

கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.6.10

** மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக் *

காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன *

பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி *

கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே