தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே
துணையும் தொழும்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும் கருப்புச்சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழு நரகுக்கு உறவாய மனிதரையே
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக்கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே
சென்னியது உன்பொற் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
கருத்தன எந்தை தன் கண்ணன வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தனமூரலும் நீயும் அம்மே வந்து என்முன் நிற்கவே
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வான் அந்தமான வடிவு உடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானம் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே
பூத்தவளே புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னை
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே
தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே
அதிசயம் ஆன வடிவு உடையாள் அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளி நிற்கவே
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுள்ளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கு அலை செங்கை சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கே என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே
சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுள்ளமே
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே
உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே
இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும் எட்டு
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனை
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே
ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே
வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே
இடம் கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே
பரிபுரச் சீறடி பாசாங் குசை பஞ்ச பாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவேனே
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும் படி அன்று வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே
அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண்அன்றழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள் தகை சேர்நயன
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே
தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே
பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே
