Andal_Thiruppavai


ஆண்டாள்  – திருப்பாவை

Azhwar Paasuram Count Media
ஆண்டாள்  திருப்பாவை 30
Total 30

1   ஆண்டாள்  – திருப்பாவை – 1

** மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் *

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் *

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் *

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் *

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் *

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் *

நாராயணனே நமக்கே பறை தருவான் *

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

   

2   ஆண்டாள்  – திருப்பாவை – 2

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்கு *

செய்யும் கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடிபாடி *

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி *

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் *

செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் *

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி *

உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

   

3   ஆண்டாள்  – திருப்பாவை – 3

** ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி *

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் *

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து *

ஓங்கு பெறும் செந்நெல் ஊடுகயலுகள *

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப *

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்க * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் *

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

   

4   ஆண்டாள்  – திருப்பாவை – 4

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல் *

ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி *

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து *

பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில் *

ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து *

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் *

வாழ உலகினில் பெய்திடாய் * நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

   

5   ஆண்டாள்  – திருப்பாவை – 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை *

தூய பெருநீர் யமுனைத் துறைவனை *

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை *

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை *

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது *

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க *

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் *

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

   

6   ஆண்டாள்  – திருப்பாவை – 6

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் *

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ *

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு *

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி *

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை *

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் *

மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம் *

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

   

7   ஆண்டாள்  – திருப்பாவை – 7

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே *

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து *

வாச நறும்குழல் ஆய்ச்சியர் * மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ *

நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன் மூர்த்தி *

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ *

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

   

8   ஆண்டாள்  – திருப்பாவை – 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு *

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் *

போவான் போகின்றாரைப் போகாமல்காத்து * உன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் * கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு *

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய *

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் *

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

   

9   ஆண்டாள்  – திருப்பாவை – 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய *

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் *

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் *

மாமீர் அவளை எழுப்பீரோ * உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ *

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ *

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று *

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

   

10   ஆண்டாள்  – திருப்பாவை – 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் *

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் *

நாற்றத் துழாய்முடி நாராயணன் * நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் * பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும் *

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ *

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே *

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

   

11   ஆண்டாள்  – திருப்பாவை – 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து *

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் *

குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே *

புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் *

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து * நின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட *

சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டி * நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

   

12   ஆண்டாள்  – திருப்பாவை – 12

கனைத்து இளம்கற்றெருமை கன்றுக்கு இரங்கி *

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர *

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் *

பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றி *

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற *

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் *

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் *

அனைத்து இல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

   

13   ஆண்டாள்  – திருப்பாவை – 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை *

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் *

பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார் *

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று *

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் *

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே *

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால் *

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்

   

14   ஆண்டாள்  – திருப்பாவை – 14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் *

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் *

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் *

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் *

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் *

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் *

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் *

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

   

15   ஆண்டாள்  – திருப்பாவை – 15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ *

சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன் *

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும் *

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக *

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை *

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள் *

வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை * மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

   

16   ஆண்டாள்  – திருப்பாவை – 16

** நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே * கொடித்தோன்றும்

தோரணவாயில் காப்பானே * மணிக்கதவம் தாள்திறவாய் *

ஆயர் சிறுமியரோ உமக்கு * அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் *

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் *

வாயால் முன்னம்முன்னம் மாற்றாதே அம்மா * நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

   

17   ஆண்டாள்  – திருப்பாவை – 17

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் *

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் *

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே *

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் *

அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த *

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் *

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா *

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்

   

18   ஆண்டாள்  – திருப்பாவை – 18

** உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் *

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் *

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் *

வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் * மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் *

பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாட *

செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்ப *

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

   

19   ஆண்டாள்  – திருப்பாவை – 19

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் *

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி *

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் *

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் *

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை *

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் *

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால் *

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

   

20   ஆண்டாள்  – திருப்பாவை – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று *

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய் *

செப்பம் உடையாய் திறல்உடையாய் * செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய் *

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் *

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய் *

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை *

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

   

21   ஆண்டாள்  – திருப்பாவை – 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப *

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் *

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் *

ஊற்றம் உடையாய் பெரியாய் * உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய் *

மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண் *

ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே *

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

   

22   ஆண்டாள்  – திருப்பாவை – 22

அம்கண்மா ஞாலத்து அரசர் * அபிமான 

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே *

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் *

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே *

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ *

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் *

அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் *

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

   

23   ஆண்டாள்  – திருப்பாவை – 23

** மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும் *

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து * வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி *

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு *

போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா * உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளி * கோப்புடைய

சீரிய சிங்காசனத்து இருந்து * யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

   

24   ஆண்டாள்  – திருப்பாவை – 24

** அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி *

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி *

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி *

கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி *

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி *

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி *

என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் *

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

   

25   ஆண்டாள்  – திருப்பாவை – 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து * ஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர *

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த *

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் *

நெருப்பென்ன நின்ற நெடுமாலே * உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் *

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி *

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

   

26   ஆண்டாள்  – திருப்பாவை – 26

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் *

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் *

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன *

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே *

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே *

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே *

கோல விளக்கே கொடியே விதானமே *

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

   

27   ஆண்டாள்  – திருப்பாவை – 27

** கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா * உந்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் *

நாடு புகழும் பரிசினால் நன்றாக *

 சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே *

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம் *

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு *

மூடநெய் பெய்து முழங்கை வழிவார *

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

   

28   ஆண்டாள்  – திருப்பாவை – 28

** கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் *

அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து * உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம் *

குறைஒன்றும் இல்லாத கோவிந்தா * உந்தன்னோடு

உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது *

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் * உந்தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே *

இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

   

29   ஆண்டாள்  – திருப்பாவை – 29

** சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்து * உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய் *

பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து * நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது *

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா *

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் * உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் *

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

   

30   ஆண்டாள்  – திருப்பாவை – 30

** வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை *

திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி *

அங்கப் பறைகொண்ட ஆற்றை * அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்

கோதைசொன்ன  * சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே *

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள் *

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் *

எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்