Periyalwar_Thiruppallandu


பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு

Azhwar Paasuram Count Media
பெரியாழ்வார் திருப்பல்லாண்டு 12
Total 12

1   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 1

** பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு *

பலகோடி நூறாயிரம் *

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா * உன்

செவ்வடி செவ்விதிருக் காப்பு

   

2   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 2

** அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு *

வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு *

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு *

படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

   

3   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 3

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின் *

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் *

ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் * இராக்கதர் வாழ்இலங்கை

பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே

   

4   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 4

ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து *

கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ *

நாடுநகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று *

பாடுமனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே

   

5   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 5

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை *

இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு *

தொண்டக் குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி *

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே

   

6   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 6

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி *

வந்து வழிவழி ஆட்செய்கின் றோம் * திரு வோணத் திருவிழவில்

அந்தியம் போதில் அரியுரு வாகி அரியை யழித்தவனை *

பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதமே

   

7   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 7

தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின் *

கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் *

மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி

பாய * சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

   

8   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 8

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் *

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் *

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயிராக்க வல்ல *

பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே

   

9   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 9

உடுத்துக் களைந்தநின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு *

தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் *

விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில் *

படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

   

10   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 10

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட

அந்நாளே * அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் *

செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து * ஐந்தலைய

பைந்நாகத்தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

   

11   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 11

** அல்வழக்கொன்றுமில்லா அணி கோட்டியர் கோன் * அபிமானதுங்கன்

செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன் *

நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பலபரவி *

பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே

   

12   பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு – 12

** பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை * சார்ங்கமென்னும்

வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல் *

நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய என்று *

பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே